Saturday, December 24, 2011

அரக்கோணம் அருகே 2 மகன்களுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அரக்கோணம்:அரக்கோணத்தில் 2 மகன்களுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியை அடுத்த மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பாபு(32). இவரது மனைவி ராதிகா(28). இவர்களுக்கு ரோசன்(6), நவீன்குமார் என்ற 2 மகன்கள் இருந்தனர்.

நேற்று திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அம்மன் கோவிலுக்கு 2 மகன்களுடன் சென்ற ராதிகா சாமி கும்பிட்டார். அதன்பிறகு அங்கிருந்து பாசஞ்சர் ரயில் மூலமாக வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரயில் நிலையம் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் ராதிகா 2 மகன்களுடன் நடந்து சென்றார்.

அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற ராதிகா 2 மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி இறந்தது குறித்த தகவல் அறிந்த ராதிகாவின் கணவர் பாபு அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து, கதறி அழுதார்.

அதன்பிறகு தனது மனைவி ராதிகா தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும், தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி பலியாகி இருக்கலாம் என்றும், தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாபு போலீசாரிடம் கூறினார்.


0 comments:

Post a Comment